Monday, May 6, 2013

உழைப்பாளர் தினக் கொண்டாட்டம் 2013



எதிர்வரும் வெள்ளிக்கிழமை மே 10-ஆம் தேதியன்று இந்தியன் கிளப் வளாகத்தில் பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் "உழைப்பாளர் தினக் கொண்டாட்டம்" கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதுசமயம் தமிழ்த்திரையுலகின் வளர்ந்துவரும் இசையமைப்பாளரும், பிரபல மேடை பாடகருமான துரைராஜன் அவர்கள் தன் குழுவினருடன் இசைவிருந்து அளிக்க உள்ளார்.



துரைராஜன் "கலைஞர்" தொலைக்காட்சி நடத்தும் "இன்னிசை மழை" மற்றும் "ஜெயா" தொலைக்காட்சியில் நடைபெறும் "மனதோடு மனம்" நிகழ்ச்சி  மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர். மேலும் "சன்", "இமயம்" மற்றும் "ராஜ்" தொலைக்காட்சியிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிகழ்ச்சியில் இடம்பெற்று தன் திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம். எஸ்.ஜானகி, பி.சுசிலா, P.B.ஸ்ரீனிவாஸ் உட்பட பிரபல பின்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து மேடைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி "சொதப்பல் மன்னன்" என்ற படத்தையும் இயக்க உள்ளார்.

கடந்த வருடம் பாரதி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த மே தின கொண்டாட்டத்தின்போது நடந்த "மானாட மயிலாட" ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் துரைராஜன் சிறப்பாக பங்கேற்று தன் வசீகரக் குரலால் ரசிகர்களின் அமோக வரவற்பைப் பெற்றவர் என்பது இங்கு குறிப்படத்தக்கது. ரசிகர்களின் மிகுந்த வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வரவழைக்கப்படுள்ளார்.


துரைராஜனுடன் இணைந்து இசைமழை பொழியவிருக்கும் ஜோதிலட்சுமி வெளிவவரவிருக்கும் பற்பல புதிய தமிழ்த்திரைப்படங்களில் பின்னணி பாடகியாக வலம் வருபவர். "பேசாமல் பேசினால்", "குடும்ப அட்டை", "குட்டிபுலி ஆட்டம்" மற்றும் பல படங்களில் தொடர்ந்து பாடி வருகிறார். தமிழகத்தில் எண்ணற்ற மேடைகளில் பிரபல பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார். வெளிநாடுகளிலும் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இசை வாத்தியக் கலைஞர்களுடன் அரங்கேறும் இந்நிகழ்ச்சியில் துள்ளல் இசையுடன் 'கானா' பாடல்களும், மனதை வருடும் மெல்லிசை பாடல்களும், புத்தம் புதிய "சூப்பர் ஹிட்" பாடல்களும், காலத்தால் அழியாத அமுத கானங்களும் செவிக்கு விருந்தாக தேனாக இசைக்கப்படும்.



நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக "மாந்தன்" பட கதாநாயகி கன்னல், குழுவினருடன் பங்கேற்கும் திரைப்பட நடனம் அரங்கேற்றப்படும்.

ஆண்டுதோறும் பாரதி தமிழ்ச்சங்கம் நடத்தும் பிரமாண்டமான "உழைப்பாளர் தினக் கொண்டாட்டம்" இது. முத்துத்தீவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ் ரசிகப் பெருமக்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமான திடீர்ப்பரிசுகள் அவர்களுக்காக காத்திருக்கின்றது. வழக்கம் போல இந்நிகழ்ச்சியும் நினைவில் நிற்கக்கூடிய நிகழ்ச்சியாக அமையும் என்பதில் சற்றும் ஐயமில்லை

நிகழ்ச்சி மாலை 6.30 முதல் அமர்க்களப்படும். நுழைவுக்கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் இலவசம். முதலில் வருபவர்களுக்கு இருக்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 39404100, 39628773, 3344711 அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

No comments: